அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்து பேசிக்கொண்டிருந்த தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்த்தும் முடிவினை அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று பேசினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.
அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.
இந்நிலையில், அவையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து தே.மு.தி.க. வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து முதல்வர் எழுந்து, தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவங்களால் இன்று காலையில் தமிழக சட்டமன்றம் பெரும் அமளியானது.
நன்றி-- தமிழன்
No comments:
Post a Comment